திருப்பூர், டிச.15: கிறிஸ்துமஸ் பண்டிகை வருகின்ற 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடக்கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் விடுமுறை நாளான நேற்று கடைவீதிகளில் திரண்டிருந்தனர்.
திருப்பூர் காமராஜ் சாலை, புது மார்க்கெட் வீதி, காதர் பேட்டை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்களுக்கு தேவையான கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார், வண்ண நிற பலூன்கள் உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர்.
விடுமுறை நாளான நேற்று திருப்பூர் மாநகரின் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் விடுதிகளில் தங்கி உள்ள வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை பேருந்துகளில் அழைத்து வந்திருந்தனர்.
மாநகராட்சி சந்திப்பு அருகே அவர்களை இறக்கி விட்ட நிலையில் நாள் முழுவதும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மாலை மீண்டும் விடுதிக்கு சென்றனர். இதன் காரணமாக புது மார்க்கெட் மீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
