ஊட்டி, டிச. 18: கம்பு, நேப்பியர் போன்ற வகை புற்கள் பயன்படுத்துதால் மண் அரிப்பை தடுப்பதுடன் பசுந்தீவன தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என ஊட்டியில் நடந்த பயிர் சாகுபடி பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரியல் தொழில்நுட்பத்துறையின் நிதியுதவியுடன் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக மலைப்பகுதிகளுக்கு ஏற்ற மண் வள பாதுகாப்பு மற்றும் தீவனத்திற்கு உகந்த பயிர்களின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் துவங்கியது. இதில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் விரிவுரைகள், செயல் முறை விளக்கங்கள், களப்பார்வை ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பயிற்சியின் தொடக்க விழா ஊட்டியில் நடந்தது. இதில் சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் அனில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதையடுத்து அனில்குமார் பேசியதாவது: தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பால் உற்பத்திக்கு மட்டுமின்றி, இயற்கை விவசாயத்திற்கு தேவைப்படும் (எருவு) உரத்திற்காகவும் கால்நடை வளர்ப்பது அவசியம், என்றார்.