மன்னார்குடி, டிச.16: திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் 27 மற்றும் 30 ஆகிய தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதையொட்டி வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் மாவட்டம் முழுவதிலும் 32 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 557 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 139 மண்டல அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பயிற்சி வகுப்புகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதிலும் 1,771 வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள 11 ஆயிரத்து 235 வாக்கு பதிவு அலுவலர்களுக்கு, வாக்குச் சாவடியில் தலைமை அலுவலரின் பணி, முதலாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, வாக்குப்பதிவின் முடிவில் செய்ய வேண்டிய பணிகள், வாக்கெடுப்புக்கு முன் ஆற்ற வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் பொழுது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப் பட்டது.இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள மன்னார்குடி ஒன்றியத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மன்னார்குடியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ (பொ) ஜெயபிரித்தா தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஞானம் துவக்கி வைத்தார். பயிற்சி வகுப்பிற்கு மன்னார்குடி தாசில்தார் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.