ஈரோடு, டிச. 16: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் வெங்காயம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் தினமும் சமையலில் வெங்காயத்தினை சேர்க்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்கு துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் வரத்தானது. இந்த வெங்காயத்தினை வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இது குறித்து வெங்காய வியாபாரி கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டுக்கு புனே, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயமும், ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஆசனூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்தாகும். நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்கு வெங்காயம் வரத்தாகும்.