குலசேகரம், டிச.13: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை மாநில நெடுஞ்சாலைகளின் இணைப்புச் சாலையாக ஆற்றூர்- குட்டக்குழி - புலிப்பனம் சாலை உள்ளது. சுமார் 6 கிலோமீட்டர் நீளமுடைய இந்த சாலை ஆற்றூர், குட்டக்குழி, தெற்றை, புலிப்பனம் பகுதிகளை பிற பகுதிகளுடன் இணைக்கிறது. குட்டக்குழி சுற்றுவட்டார பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், இன்ஜி கல்லூரி, அரசு, தனியார் பள்ளிகள் உள்ளதால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சாலையில் ஆற்றூர் முதல் குட்டக்குழி வரை சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆற்றூர் பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரழிந்து மேடுபள்ளங்களாக உள்ளது. பெரும்பாலான இடங்கள் சாலைக்கான அடையாளம் தெரியாமல் மண்சாலை போல மாறியுள்ளது. வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மழைகாலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. தினசரி விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது.