மதுரை, டிச.12: மதுரை மத்திய சிறை கைதிகள் பூந்தொட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான அங்காடியை சிறைத்துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார். மதுரை மத்திய சிறையில் 1800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால நலனையும் உயர்த்தும் வகையில் சிறை நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டிகள் விற்பனை அங்காடியை சிறைத்துறை டிஐஜி பழனி நேற்று தொடக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கைதிகள் மூலம் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, உணவு பொருட்கள், பூந்தொட்டி, நர்சரி, ஆடைகள், இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து சிறை வளாகத்தின் முன் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இங்குள்ள சிற்றுண்டி அங்காடியில் காலை மற்றும் மதிய உணவு மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால், கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.