புதுக்கோட்டை, டிச.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று 623 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27ம்தேதி முதல் கட்டமாகவும், 30ம் தேதி 2-வது கட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்னண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2ம் கட்டமாக அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நடக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
