நாகை, டிச.12: நாகையில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாகையில் இன்று (12ம் தேதி) ஒருநாள் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தப்படும் என்று இந்திய வர்த்தக தொழிற்குழுமம் தலைவர் ரவி கூறினார். நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய வலியுறுத்தி அனைத்து சேவை சங்கங்கள், வர்த்தகர்கள், நாகை நகர வளர்ச்சிக்கு பங்கேற்கும் தன்னார்வலர்கள், அனைத்து கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நாகை இந்திய வர்த்தக தொழிற்குழும அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்எல்ஏ மதிவாணன், இந்திய வர்த்தக தொழிற் குழும நாகை தலைவர் ரவி, செயலாளர் சுந்தரவேலு, பொருளாளர் நிஜாம், துணைதலைவர் பாட்சா, இணைச் செயலாளர் கணேசன், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், அதிமுக நகர செயலாளர் தங்ககதிரவன், காங்கிரஸ் கட்சி மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திர நாட்டார், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில செயலாளர் செய்யதுமுபாரக், மதிமுக நகர செயலாளர் ராஜராஜசோழன், மீனவகிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.