நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாகப்பட்டினம்,மே15: நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்தது. கலெக்டர்(பொ) பேபி தலைமை வகித்து வாகனங்களை ஆய்வு செய்தார். இதில் 9 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 146 வாகனங்களில் நேற்று 126 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர்(பொ) புகழேந்தி, டிஎஸ்பி பாலகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் பள்ளி வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வாகனங்களுக்கு முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என்கிற லோகோ இடம் பெற்றிருக்க வேண்டும். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்க வேண்டும். அவசர கால கதவுகள், சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தரைதளம் உறுதியாக இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருகி, இருக்கைகள், புத்தக பை வைக்கும் அறை ஆகியவை இடபெற்றிருக்க வேண்டும். முதல் படிக்கட்டு 30 சென்டிமீட்டருக்கு குறைவாக இருக்க வேண்டும் உள்ளிட்ட 12 கட்டுப்பாடுகள் அனைத்து தனியார் பள்ளி வாகனத்திலும் இடம் பெற்று இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் கொண்ட 117 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் இல்லாத 9 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் ஒரு வார காலத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பித்து மீண்டும் தகுதி சான்று பெற்ற பின்னர் இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

The post நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: