பெரியகுளம், டிச.11: பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மலைமேல் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக இந்த கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பானதாக கருதப்படுகிறது. கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா கார்த்திகை தீபம் மலைமேல் ஏற்றப்படும். அதே போன்று இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இதற்காக 500 கிலோ நெய் கொண்ட அகண்ட தீப மண்டபம் அமைக்கப்பட்டது. நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.