மூணாறு, டிச.11: மூணாறில் இக்கா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் முடங்கி கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.மூணாறில் சுற்றுவட்டார பகுதிகளில் அரங்கேறும் நில ஆக்கிரமிப்புகள், சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டுதல், அரசு நிலங்களை அபகரித்தல், போலி பட்டாக்கள் போன்றவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு தனியார் நபர் ஆக்கிரமித்திருந்த இடத்தை அரசு எடுத்து மூணாறு இக்காநகர் பகுதியில் சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் அமைக்கப்பட்டது. நிலம் சம்பந்தமாக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இந்த அலுவலகம் தற்பொழுது அதிகாரிகள் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. சிறப்பு தாசில்தார் தலைமையில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சில அரசியல் கட்சி தலைவர்கள் நுழைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரும் ஜனவரி 10ம் தேதி வரை சிறப்பு தாசில்தார் விடுமுறை எடுத்து சென்றுவிட்டார். இவருக்கு பதிலாக துணை தாசில்தார் பொறுப்பு வகித்தாலும் எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.