குமாரபாளையத்தில் 2 பெண்களை காதலித்த வாலிபர் தற்கொலை

குமாரபாளையம், டிச.11:குமாரபாளையத்தில் 2 பெண்களை காதலித்த வாலிபர், அவர்களில் யாரை திருமணம் செய்வது என முடிவெடுக்க முடியாமல், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(23). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 4 மாதத்திற்கு முன், காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். காதல் தோல்வியால் மணிகண்டன் சோகமாக இருந்தார். இதை கண்ட அவரது தாய், மகனுக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்த மணிகண்டனுக்கு, அவர் மீதும் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டு பேசிய முன்னாள் காதலி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதனால் குழப்பமடைந்த மணிகண்டன், யாரை திருமணம் செய்வதென முடிவெடுக்க முடியாமல் திணறினார். இப்பிரச்னையில் முடிவெடுக்க முடியாத அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற குமாரபாளையம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: