ராசிபுரம், டிச.11: ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில், கட்டண கழிப்பிடத்துக்கு வருவாய் ஏற்டுத்த, இலவச பெண்கள் கழிப்பறையை பூட்டி வைப்பதால் பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக நகரட்சி சார்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு கழிப்பறை இலவசமாக பயன்படுத்தவும், மற்றொரு கழிப்பறை தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தனியார் நிர்வகிக்கும் கழிப்பறைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால், பொதுமக்கள் யாரும் அங்கு செல்வதில்லை. மாறாக இலவச கழிப்பறையையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தனியார் கழிப்பறையை பராமரிக்கும் நபர்கள், நகராட்சி இலவச கழிப்பறையை நிர்வகிக்கும் நபரிடம் கூறி, அவரை கவனித்து, இலவச கழிப்பறையை பூட்டி விடுகின்றனர்.