வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அலுவலகத்திற்கு இடையூறாக இருந்த கம்பிகள் தினகரன் செய்தி எதிரொலியாக மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், சட்டமன்ற அலுவலகம், புள்ளியியல் அலுவலகம் ஆகியவை தற்போது ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காவல் நிலையத்தின் மூலம் குற்றவழக்குகளில் தொடர்புடைய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றிற்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு திட்டபணிகளுக்கான கம்பிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே திறந்த வெளியில் அலுவலகத்திற்கு பெரிதும் இடையூறாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், வாகனங்களை வெளியே எடுப்பதற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.