தேனி, டிச. 10: கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அத்தனை பேருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை முழு அளவிலான மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் சீருடை அணியாமலும், கைகளுக்கு கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் குப்பைகளைக் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரிக்கும் பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இந்த பணிகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.