சோழவந்தான், டிச.10: சோழவந்தான் ஏடிஎம்.மில் கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபரின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர். சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் மணி என்ற அய்யர் மணி(39). டிரைவர். இவர் நேற்று காலை சோழவந்தான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம்.மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம் மிஷின் அருகே கீழே பணக்கட்டு கிடந்தது. எடுத்து பார்த்த போது 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் ஒன்பதும், 500 ரூபாய் தாள்கள் முப்பத்தி நான்கும் என 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதை உடனடியாக சோழவந்தான் காவல் நிலையத்தில் அய்யர்மணி ஒப்படைத்தார். இது குறித்து வங்கி மேலாளர் நல்லதம்பியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இந்த பணத்தை அம்மன் சன்னதியில் மொபைல் கடை வைத்துள்ள கணேஷ் பாண்டி என்பவர் தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேஷ் பாண்டியிடம் பணத்தை ஒப்படைத்தனர். கீழே கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த அய்யர்மணியின் நேர்மையை, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.