திருவள்ளூர், டிச. 10: திருவள்ளூரில் ரூ.325 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. இதற்கு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக காங்கிரஸ் எம்.பி., டாக்டர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில், நேற்று திருவள்ளூர் காங். எம்.பி., டாக்டர் கே.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் நேரத்தின்போது வாக்காளர்களிடம் அளித்த வாக்குறுதியில், திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடி, தமிழக முதல்வரின் பரிந்துரையின்பேரில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்ததற்கு, மத்திய, மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.