காஞ்சிபுரம், டிச. 10: காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் இ சேவை மையக் கட்டிடத்தில், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால், பள்ளி கல்வித்துறை மீது கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் அரை கிலோ மீட்டர் தூரம் இ சேவை மைய கட்டிடத்தில் சில வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த கல்வி ஆண்டு இறுதியில் இப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் உடைந்து விழுந்தது. இதையடுத்து, வேறு அறைகள் இல்லாததால் அந்த வகுப்பறை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள இ சேவை மையக் கட்டிடத்தில் மாற்றப்பட்டன.இதனால் சில வகுப்புகள் ஏற்கனவே உள்ள பள்ளி கட்டிடத்திலும், சில வகுப்புகள் நீண்ட தூரத்தில் உள்ள கட்டிடத்திலும் நடப்பதால், பள்ளிக் கல்வித்துறை மீது பெற்றோர்கள் அதிருப்திடைந்துள்ளனர்.