நாமக்கல், டிச.9: நாமக்கல் நகரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல், நாமக்கல் நகரில் கொடி கட்டி பறக்கும் தடை செய்யப்பட்ட போதப்பொருட்கள் விற்பனையை தடுப்பதில் திடீர் ஆர்வம் காட்டிய நாமக்கல் போலீஸ் அதிகாரிகள், தற்போது போதைப்பொருட்கள் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
கடந்த இரு மாதத்துக்கு முன்பு நாமக்கல் கடை வீதியில், திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், ராஜஸ்தான் மாநில வியாபாரிகளின் கடையில் இருந்து ₹5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை கைப்பற்றினர். விற்பனையாளர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், கடந்த வாரம் கடை வீதியில் உள்ள ஒரு ஸ்டோரில் சோதனை செய்த போலீசார், கடை உரிமையாளர் மீது சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து விடுவித்து விட்டனர்.இதேபோல், துறையூர்ரோட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த நபர் மீதும் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விட்டு விட்டனர். போலீசாரின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், நகரில் மீண்டும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.