நாகர்கோவில், டிச.9: திருகார்த்திகையையொட்டி குமரி மாவட்ட கோயில்களில் நாளை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நட்சத்திர தினத்தன்று திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குமரி மாவட்ட கோயில்கள், வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு (நாளை) 10ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா ஆகும். இதையொட்டி அன்று கோயில்கள், வீடுகளில் தீப அலங்காரங்கள் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்று மருந்துவாழ்மலையில் உள்ள பரமார்த்தலிங்கபுரம் சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அன்னதானம் போன்றவை நடத்தப்படுகிறது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடக்கின்றன. பின்னர் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவே அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று இரவு பகவதி அம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.