நாகர்கோவில், டிச.5 : கோட்டார் சவேரியார் பேராலயத்தில் திருக்கொடியிறக்க நிகழ்வு வரும் 8ம்தேதி நடக்கிறது. கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி 8ம் திருவிழாவான 1ம்தேதி இரவு தொடங்கியது. 2ம் தேதி 9ம் திருவிழா அன்று இரவும் தேர் பவனி நடந்தது. தேர்பவனியின்போது தேரில் பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட்டனர். வேண்டுதல்கள் நிறைவேற குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தபடி தேருக்கு பின்னால்வந்தனர் நேற்று முன்தினம் (3ம்தேதி) 10ம் திருவிழா நடந்தது. அன்று காலையில் தேர்பவனி நடந்தது. அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால், நள்ளிரவு வரை பக்தர்கள் வருகை இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.