ஊட்டி, நவ.29: ஊட்டியில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டாமல், ஏற்கனவே உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையின் கட்டிடங்களை பயன்படுத்துவதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதி சுமை குறையும் என ராசா எம்.பி. தெரிவித்துளளார். நீலகிரி மாவட்டத்தில் 60 ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட எச்பிஎப். தொழிற்சாலையை கடந்த மூன்று ஆண்டுக்கு முன் நலிவடைந்த தொழிற்சாலையாக அறிவித்து மத்திய கனரகத்துறை அமைச்சகம் இந்த தொழிற்சாலையை மூடியது. இந்த தொழிற்சாலையின் கைவசம் 303 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதிய மற்றும் பழைய தொழிற்சாலை, குடியிருப்புகள், மருத்துவமனை என ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. தமிழகத்தில் புதிதாக தொடங்க உள்ள 6 மருத்துவ கல்லூரிகளில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. இந்த மருத்துவ கல்லூரி ஊட்டி அருேகயுள்ள எச்பிஎப். தொழிற்சாலை வளாகத்தில் அமைய உள்ளது. இதற்காக அங்கு முதற்கட்டமாக 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்து புதிய கட்டுமான பணிகளை துவக்க மாநில அரசு முடிவு ெசய்துள்ளது. ஏற்கனவே உள்ள எச்பிஎப். தொழிற்சாலை கட்டிடங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கட்டிடங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பழைய கட்டிடங்களை பயன்படுத்துவதன் மூலம் அந்த கட்டிடங்கள் வீணாவதை தடுப்பது மட்டுமின்றி, கட்டுமான செலவுகளை குறைக்க முடியும் என பல்வேறு தரப்பினரும் மாநில அரசிடம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்காக புதிதாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல், ஏற்கனவே உள்ள கட்டிடங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு ராசா எம்.பி. கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.