சேத்துப்பட்டு, நவ.27: சேத்துப்பட்டு அருகே சாலை விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்துக்கும் உரிய நிவாரண உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமம் சவேரியார் தெருவை சேர்ந்த மகிமைதாஸ், தங்கம், அந்தோணி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் பைக்கில் தச்சாம்பாடிக்கு சென்றபோது, நரசிங்கபுரம் அருகே முன்னால் சென்ற டிராக்டரை முந்தி சென்ற போது, டிராக்டரில் பைக் மோதியது. இதில் 3 பேரும் இறந்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், விபத்தில் பலியான மூன்று குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று தச்சாம்பாடி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் ரஜினியை கைது செய்ய வேண்டும், விபத்தில் பலியான 3 குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.