வேலூர், நவ.27:தமிழகத்தில் இருந்து திருப்பதி சென்ற அரசு பஸ்சில் கர்நாடக முத்திரை கொண்ட டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் அரசு பஸ்களில் பஸ் கண்டக்டர்களுக்கு அச்சடிக்கப்பட்ட டிக்கெட்களை பயணிகளுக்கு வழங்கி வந்தனர். இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கடந்த 2010ம் ஆண்டு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு, டிக்ெகட் பிரின்ட் செய்து தரும் இடிஎம் மெஷின் என்ற கையடக்க டிக்ெகட் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு பஸ்களில் இடிஎம் இயந்திரங்களுக்கு தேவையான பேப்பர் ரோல் சரியாக தருவதில்லை. இதனால் அரசு பஸ்களில், தனியார் நிறுவனங்களின் பேப்பர் ரோல், அல்லது பிற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முத்திரை கொண்ட பேப்பர் ரோல்களில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து தினகரன் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியாகி வருகிறது. இதையடுத்து தற்காலிகமாக அரசு பஸ்களில் பேப்பர் ரோல் வழங்கப்படுகிறது. ஆனால் மீண்டும் பேப்பர் ரோல் சரியாக வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.அதற்கேற்ப நேற்று திருவள்ளூர் பணிமனையில் இருந்து திருப்பதி வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சில் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழக முத்திரையுடன் கூடிய டிக்கெட் வினியோகம் செய்யப்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: தமிழகத்தில் தொலைதூர அரசு பஸ்களில் இடிஎம் மெஷின்கள் மூலம் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான அரசு பஸ்களில் தமிழக அரசு போக்குவரத்துக்கழக முத்திரையுடன் கூடிய டிக்கெட் வினியோகம் செய்யப்படுவதில்லை.