நாகர்கோவில், நவ.22: குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் நேற்று உலக மீனவர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21ம் தேதி உலக மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் நேற்று உலக மீனவர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் தினத்தையொட்டி கடலோர கிராமங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் படகுகள் அர்ச்சிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மீனவர் தினத்தையொட்டி சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஏராளமான படகுகள், விசைப்படகுகள் துறைமுக பகுதிகளில், கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடலுக்கு சென்றிருந்த மீனவர்களும் பெரும்பாலும் கரை திரும்பியிருந்தனர்.