கடலூர், நவ. 22: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் முழு உருவ வெண்கல சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். மேலும் மஞ்சக்குப்பம் மைதான பகுதியில் விழா அரங்கு அமைக்கப்பட்டு அங்கு நலத்திட்ட உதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடலூர் மஞ்சநகர மைதானம் மற்றும் கடலூர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி ஆணையர் ராமசாமி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பாரதி சாலை, சில்வர் பீச் சாலை உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் சிறு வணிக கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் பணி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையில் இருந்த பொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.