கண்ணமங்கலம், நவ.20: கண்ணமங்கலம் அருகே வயல்வெளியில் சாய்ந்த நிலையில் கி.பி. 10ம் நூற்றாண்டு `விஷ்ணு துர்க்கையம்மன்' கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வெல்லூர் கிராமத்தில் சம்புவராயர் ஆய்வு மையம் சார்பில் முனைவர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன், சமூக ஆர்வலர் பீமன் ஆகியோர் நேற்று முன்தினம் வரலாற்று தடயங்கள் குறித்த களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த ‘விஷ்ணு துர்க்கையம்மன்' கற்சிற்பம் ஒன்றை கண்டெடுத்தனர்.இதுகுறித்து அமுல்ராஜ் கூறுகையில், `இந்த கற்சிற்பத்தில் காணப்படும் உருவம் விஷ்ணுவின் தங்கையான ‘விஷ்ணு துர்க்கையம்மன்' ஆகும். நான்கு கரங்களுடன் சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் சாய்ந்த நிலையில் காணப்படும் சிற்பத்தின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது. தலையில் கூம்பு வடிவ கிரீடம் காணப்படுகிறது.