க.பரமத்தி, நவ. 19: உயர்மின் கோபுரம் அமைப்பதை உடனடியாக கைவிட்டு மாற்று பாதையில் சாலையோரமாக கேபிள் அமைத்து மட்டுமே செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. க.பரமத்தி கடைவீதியில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு மாநில செயலாளருமான ராஜ்குமார் தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, சிஐடியூ சங்க கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன், நொய்யல் வாய்க்கால் விவசாயிகள் சங்க தலைவர் நொய்யல் ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன், மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன், முன்னாள் க.பரமத்தி ஒன்றியக்குழு தலைவர் குப்புசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், நல்லசிவம், சாமானிய மக்கள் கட்சி நிர்வாகி குணசேகரன், மதிமுக ஒன்றிய நிர்வாகி சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்