முத்துப்பேட்டை, நவ.19: முத்துப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டில் பராமரிப்பின்றி கிடக்கும் பொதுசுகாதாரவளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தி உள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு மருதங்காவெளி அய்யாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மலம் கழிக்க அப்பகுதியை சேர்ந்த திறந்தவெளி இடங்களுக்கு செல்வதால் அவர்கள் வசதிக்காக பேரூராட்சி சார்பில் கடந்த 2012-13ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் ரூ.12லட்சம் நிதியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கு குளிக்க மற்றும் மலம் கழிக்க, சிறுநீர் கழிக்க என்று தனித்தனி வசதிகள், அதே போன்று பெண்களுக்கு தனித்தனியாக சகல வசதிகளுடன் கட்டப்பட்டது. சென்றாண்டு வரை திறப்புவிழா நடைபெறாமலே கிடந்தது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கவனிக்காததால் போதிய பராமரிப்பு இல்லாமல் கட்டிடமும் அதன் உபகரணங்களும் வீணாகியது. பின்னர் மீண்டும் சமூக விரோதிகளால் உள்ளே உள்ள பாகங்கள், தடுப்பு சுவர்கள், மீட்டர் பாக்ஸ், மோட்டார், தண்ணீர் டேங்க் போன்றவைகள் உடைக்கப்பட்டது. இதனால் மக்கள் பயன்படுத்துவதையும் நிறுத்தினர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குடிமகன்கள் பராகவும், சீட்டு விளையாட கிளப்பாகவும் பயன்படுத்தி வந்தனர். இது குறித்து சென்றாண்டு தினகரனில் படத்துடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது. இதனையடுத்து கட்டிடம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. கஜா புயலின்போது கூட தண்ணீர், டேங்க் உள்ளிட்டவை சேதமாகியது. இதனையும் தினகரன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்ட பின்னர் புதிய தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.பொது சுகாதார வளாகத்தின் நிலை இப்படி மாறியதால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி திறந்தவெளி கழிப்பறையாக மாறியும் விட்டது.