கடலூர், நவ. 19: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே வங்க கடலில் தென்கிழக்குப் பகுதியில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் கடந்த இரு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் நேற்று பகல் நேரத்திலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலேசுவரர் கோயில் வளாகத்திற்குள் மழைநீர் குளம்போல் தேங்கியது.