விருதுநகர், நவ. 19: விருதுநகரில் மழைநீர்வரத்து ஓடைகளில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகளால், மழை காலங்களில் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதனால், சுகாதாரக்கேடும், வாகன ஓட்டிகளுக்கு அவதியும் ஏற்படுகிறது. இதனை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் பழைய பஸ்நிலையம் தொடங்கி அனைத்து கழிவுநீர் வாறுகால்கள் மற்றும் மழைநீர் வடிகால் ஓடைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. நகரில் மழை பெய்தால் ஒட்டுமொத்த கழிவுநீரும் பிரதான ஓடைகளில் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்குகிறது. மேற்கு மின்வாரிய அலுவலகம் மற்றும் நகராட்சி முஸ்லீம் பள்ளி இடையே உள்ள நீர்வரத்து ஓடை தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.