சிவகங்கை, நவ. 13: மழைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக திடீர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பகுதியில் உள்ளவர்களுக்கு திடீர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது, ‘மழைகாலங்களில் குடிநீரை நன்கு காய்ச்சி பிறகே குடிக்க வேண்டும். முடிந்தவரை மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும். சுகாதாரமான ஆடைகளை அணிய வேண்டும். சூடான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அசைவத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். அக்கி, அம்மை நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நீர்க்காய்கறிகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், முருங்கைக்கீரை, பொன்னாங்கன்னி, தண்டங்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை பயன்படுத்தலாம்.