திருவாடானை, நவ. 13: நெற்பயிரில் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாடானை வட்டாரத்தில் 2019,2020ம் ஆண்டு 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிரில் பரவலாக பாக்டீரியா இலைக் கருகல் நோய் மற்றும் குலைநோய் தென்படுகிறது.
இதன் அறிகுறியாக நெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் இலைகள் கருகியது போன்று காணப்படும். மேலும் இவ்வகை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 120 கிராம், காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம், கார்பென்டாசிம் 12% உடன் மேன்கோசெப் 250 கிராம், புரோயினப் 250 கிராம் டிரைசெக்லோசோல் மற்றும் சூடோமோனாஸ் ஏக்கருக்கு ஒரு கிலோ போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து மேற்கண்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.