தேவகோட்டை, நவ.13: தேவகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலையோர திறந்தவெளி ஆழ்துளைக்கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவகோட்டை ராம்நகர் தில்லைநகர் பகுதியின் கடைசிப் பகுதியில் முள்ளிக்குண்டு பஞ்சாயத்து ஆரம்பம் ஆகின்றது. அங்கு தேவண்டதாவு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் காலி மனை இடத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக 130 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர். அதனை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். காலி மனை இடப்பகுதியும் காம்பவுண்டு எதுவும் இன்றி திறந்த வெளி பொட்டலில் உள்ளது. அதனைச் சுற்றி ஏராளமான வீடுகள் இருக்கிறது. பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள் பொட்டல் பகுதியில் தான் விளையாடி வருகின்றனர். ஆபத்தான சூழ்நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கு தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.