தக்கலை, நவ. 13: தக்கலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுட்டி மற்றும் போலீசார் கிருஷ்ணமங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோயில் ஒன்றில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தெரியவந்தது.
போலீசார் அங்கிருந்த 2 கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகி பத்மேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கீழகல்குறிச்சி பகுதியில் செல்லும்போது அங்குள்ள ஆலயம் ஒன்றில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்பாட்டில் இருப்பதை பார்த்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 ஒலிப்பெருக்கியை பறிமுதல் செய்து ஆலய நிர்வாகி ஷெர்லின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.