கன்னியாகுமரி, நவ.12: கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் வருகை தரும் சபரிமலை சீசனை முன்னிட்டு தற்காலிக கடைகள் ஏலம் நேற்று 2வது முறையாக நடந்தது.கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தரும் சபரிமலை சீசன் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தற்காலிக கடைகளுக்கான ஏலம் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி காலை தொடங்கியது. முதலில் கார் பார்க்கிங் ஏலம் நடைபெற்றது. மணிவண்ணன் என்பவர் ரூ.16 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். கடற்கரை சாலையில் 250 கடைகள், சன்னதி தெருவில் 23 கடைகள் உட்பட மொத்தம் 273 கடைகளுக்கு ஏலம் தொடங்கியது. இதில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போயின. இவை மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 206க்கு ஏலம் போனது. கோர்ட் உத்தரவுபடி கடற்கரை சாலையில் 250 கடைகள் மட்டுமே ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்ணயித்த தொகை அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கடைகளின் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.