நாகர்கோவில், நவ.12: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வருடம் கந்து வட்டி கொடுமையால் தொழிலாளி ஒருவர் மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்தார். அதன் பிறகு தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மனு அளிக்க வருகின்றவர்கள் சோதனையிடப்படுவது அவ்வப்ேபாது நடைபெறுகிறது. அதன்படி குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியிருந்தனர்.குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் வர மொத்தம் 4 நுழைவு வாயில்கள் இருந்தன. இவற்றில் இரு நுழைவு வாயில்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. தற்போது பிரதான நுழைவு வாயிலும், கூடுதல் கட்டிடம் அமைந்துள்ள நுழைவு வாயிலும் இயங்கி வந்தன. பிரதான நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வந்தனர். பின்னர் படிப்படியாக இந்த பாதுகாப்பு குறைத்துக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.