திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உடைந்து சிதைந்திருந்த டைல்ஸ் நடைபாதையை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை தரத்தை மேம்படுத்தி, பாதையை விரிவுபடுத்தும் திட்டம் ₹65 கோடியில் நடந்து வருகிறது. அதையொட்டி, கிரிவலப்பாதையின் வலதுபுறம் 2 மீட்டர், இடதுபுறம் 5 மீட்டர் தூரம் அகலப்படுத்தி, அதில் டைல்ஸ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணி முழுமையாகவும், தரமாகவும் நடைபெறவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். குறிப்பாக, கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதம் புண்படாமல் இருக்கவும், வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் பவுர்ணமி அல்லாத நாட்களில், பாதையோரம் பாதுகாப்பாக பக்தர்கள் செல்லவும் டைல்ஸ் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், பாதையின் பல்வேறு இடங்களில் உடைந்தும், சிதைந்தும் உருகுலைந்தும் காணப்படுகிறது. இந்த பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். டைல்ஸ் நடைபாதை அமைத்து ஓராண்டு முழுமையாக முடியும் முன்பே உருகுலைந்த அவலம் குறித்து, தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியானது.