செய்யாறு, நவ.12: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் அருகே டாக்டர் புரட்சித்தலைவி அம்மா திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுகவினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் உள்ள செய்யாறு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னத்தூர் தொகுதிகளில் உள்ள 2 நகரங்கள், 12 ஒன்றியங்கள், 6 பேரூராட்சி அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் பேசியதாவது: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள தலைமைக் கழக அறிவிப்பின்படி அஇஅதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுமதி கோரும் கழகத்தை சேர்ந்தவர்கள் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் அருகே உள்ள டாக்டர் புரட்சித்தலைவி அம்மா திருமண மண்டபத்தில் வரும் 15, 16ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தேர்லில் போட்டியிடும் பொறுப்புகளுக்கு ஏற்ப உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.