சத்தியமங்கலம், நவ.12: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக அதிக பாசனப்பரப்பளவை கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 105 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.