கோவை, நவ.12: பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான மாணவர் தகவல்களை எமிஸ் இணையதளம் மூலமாக மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் இரட்டைப்பதிவு மற்றும் தகவல் பிழைகள் தவிர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்கள் எமிஸ் எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை மின்ணணு தளத்தில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, ரத்தப்பிரிவு, ஆதார் எண், தொடர்பு எண், சாதி சான்றிதழ் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு, பாடப்புத்தகம், இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல கடந்த ஆண்டில் பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் தனியாக மாணவர் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதில் மாணவர்களின் பெயர், இனிசியல் மற்றும் விவரங்களில் பிழைகள் அதிகளவில் இருந்து வந்தது.