திருக்கழுக்குன்றம், நவ. 12: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நால்வர்கோயில்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சமையல் கூடம் இல்லாததால் வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை 5 ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், மாணவர்கள் அமர இடம் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நால்வர் கோயில்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் கட்டப்பட்ட சமையல் அறை கட்டிடம் பழுதடைந்து முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், சமையல் செய்ய இடமில்லாமல், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வகுப்பறையில், மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கப்படுகிறது.