காஞ்சிபுரம், நவ. 12: திருப்போரூர் - தண்டலம் செல்லும் வழியில் செயல்படுத்தப்படும் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் பணி தொடர்வதை நிறுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருப்போரூர், தண்டலம் கிராமங்களைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளான எங்களின் வாழ்வாதார நிலங்களை ஓஎம்ஆர் புறவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்குவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருப்போரூரில் உண்ணாவிரதம் நடத்தி, எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம்.