தொள்ளாழி ஊராட்சி ஆரம்ப பள்ளியில் புதர்கள் அகற்றம்

வாலாஜாபாத்: தினகரன் செய்தி எதிரொலியால், தொள்ளாழி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் செடி, கொடிகளுடன் காணப்பட்ட புதர்கள் அகற்றப்பட்டன. இதனால், மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். வாலாஜாபாத் ஒன்றியம் தொள்ளாழி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.இந்த தொள்ளாழி ஊராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் புதிய கட்டிடத்தின் ஜன்னல்கள் உள்ள பின்பகுதியில் புதர்கள் மண்டி காணப்படுவதால், இப்புதர்களின் வழியாக நச்சுத்தன்மை வாய்ந்த விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.இவ்வாறு, ஆரம்பப்பள்ளி முழுவதும் புதர்மண்டி காணப்படுவதால், விஷப்பூச்சிகள் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் ஊடுருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் கடந்த 13ம்தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் அருகாமையில் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில், ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள், பள்ளி வளாகத்தில் இருந்து புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்நிகழ்வால், அப்பகுதி கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழ்க்கும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

The post தொள்ளாழி ஊராட்சி ஆரம்ப பள்ளியில் புதர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: