தொடர்ந்து பெய்து வரும் மழையால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடு வரத்து குறைந்தது

ஈரோடு, நவ. 8: ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. இதனால், 3 கோடி ரூபாய்க்கு மட்டுமே மாடு விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். ஆனால், தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாடுகளுக்கு தீவணம் நன்கு கிடைத்து வருகிறது. இதனால், நேற்று நடந்த சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. சந்தையில் 200 பசுமாடுகளும், 150 எருமைமாடுகளும், 150 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதில், 85 சதவீத மாடுகள் விற்பனையானது. மாடுகள் வரத்து குறைந்த நிலையிலும் நேற்று நடந்த சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்றது. மாடுகளை வாங்கி செல்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். வழக்கமாக, 1,200க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்ய கொண்டு வரவில்லை. இதனால் மாடுகள் வரத்து குறைந்து போனதாக மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் தெரிவித்தார்.

Related Stories: