நாகர்கோவில், நவ.7 : 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று காலை தொடங்கினர். குமரி மாவட்ட பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தில், 250 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலகம் சுத்தம் செய்தல், டவர் பராமரிப்பு, லைன் பராமரிப்பு, பிராட் பேண்ட் இணைப்புகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், நிதி இல்ைல என கூறி சம்பளம் வழங்காமல் உள்ளனர். மேலும் பணி நேரத்தை குறைப்பது, பணி நீக்கம் செய்வது, 50 சதவீத ஊழியர்கள் குறைப்பு போன்ற வேலைகளை பி.எஸ்.என்எல். நிர்வாகம் செய்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.