கன்னியாகுமரி, நவ.7: கன்னியாகுமரி வாவத்துறையை சேர்ந்த மீனவர் சாஜூ (29). தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பினார். பின்னர் வலையில் இருந்த மீன்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் அபூர்வ வகை நண்டு சிக்கியிருந்ததை பார்த்தார். தினமும் வலையில் ஏராளமான நண்டுகள் கிடைக்கும் என்றாலும் இது பார்ப்பதற்கு புதுவகையாக இருந்ததால் அதனை கன்னியாகுமரி காமராஜர் மண்டபம் அருகேயுள்ள அக்வா மீன் கண்காட்சி கூடத்தில் ஒப்படைத்தார். இக்கண்காட்சி கூடத்தில் ஏற்கனவே 135 வகையான மீன் மற்றும் நண்டு இனங்கள் உள்ளதாக அதன் உரிமையாளர் ஜெபர்சன் தெரிவித்தார். ‘ரெட் ஃபிராக் கிராப்’ என அழைக்கப்படும் இந்த நண்டு குயின்ஸ்லாந்தின் யெப்பூன் முதல் நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கடற்கரை வரையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையையொட்டிய நீர்ப்பரப்பிலும் வாழ்கின்றன.