காரைக்குடி, நவ.7: காரைக்குடி அருகே ரஸ்தா பகுதியில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதி குப்பைகள் சேகரித்து வைக்கப்படும் கிடங்கை சுற்றி தற்போது மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி பகுதியில் 36 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வீடுகள் மற்றும் ஓட்டல் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களில் இருந்து தினமும் 48 டன்களுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பைகள் தனியார் மற்றும் நகராட்சி பணியார்களை கொண்டு தினமும் பெறப்படுகிறது. இது மொத்தமாக லாரிகள் மூலம் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் 13.70 ஏக்கரில் உள்ள உரக்கிடங்கு மற்றும் நிலம் நிரப்பும் இடத்தில் கொட்டப் படுகிறது. இந்த குப்பை கிடங்கு பகுதிக்கு அருகில் காதிநகர், வசந்தம் நகர், பழைய செஞ்சை, நகாவயல் ரோடு, பழைய சங்கராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாகத்தான், தேவகோட்டை, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.