காரைக்குடி, நவ.7: காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச பச்சரிசி கடத்தப்பட்டு முறுக்கு மற்றும் இடியாப்ப மாவு கம்பெனிகளுக்கு கடத்தப்படுவதாகவும், புழுங்கல் அரிசி பாக்கெட் மாவு அரைக்கவும், கோழி தீவனத்திற்கும் அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி தாலுக்காவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. 100 முழுநேர கடைகளும், 28 பகுதிநேர கடைகளும் செயல்படுகின்றன. சீனி, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் அரசு விற்பனை செய்துவருகிறது. அரிசியை பொறுத்தவரை ஒரு நபருக்கு அதிக பட்சமாக புழுங்கல் அரிசி 15 கிலோவும், பச்சரிசியை பொறுத்தவரை 5 கிலோ என 20 கிலோ அரிசி இலவசமாகவும் அரசு வழங்குகிறது. புழுங்கல் அரிசியை பொறுத்தவரை கிராமப்பகுதி மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். நகர் பகுதியில் ஒரு சிலரே வாங்குகின்றனர். இத்தகைய அரிசி பாலீஸ் போடப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும், பாக்கெட் மாவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பச்சரிசியை பொறுத்தவரை பெரும்பாலும் மக்கள் வாங்குவது கிடையாது. ரேசன் அரிசியை நேரடியாக கடத்தினால் அதிகாரிகளிடம் பிடிப்பட்டு விடுவதால் சமீபகாலமாக நூதன முறையை கையாண்டு வருகின்றனர்.