புழல், நவ. 7: செங்குன்றம், புழல், வடபெரும்பாக்கம், கிராண்ட்லைன், செட்டிமேடு பகுதிகளில் ஜிஎன்டி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி திரிவதுடன், அங்கேயே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதில் ஒருசில மாடுகள் திருடு போய்விடுகின்றன.
இந்நிலையில், வடபெரும்பாக்கம் அடுத்த செட்டிமேடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு சரக்கு ஆட்டோவில் 3 பேர் கும்பல் சுற்றி திரிந்தது. அங்கு சாலையில் படுத்திருந்த மாடுகளை பிடிக்க முயற்சித்தனர். இதனால் மாடுகள் மிரண்டு கத்தவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அங்கு மாடுகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.